அதிக நாடுகடத்தல்கள்
2024ஆம் ஆண்டின் புலம்பெயர்தல் கொள்கையைப் பொருத்தவரை, நிலைமை எப்படி இருக்கும் என்பது ஏற்கனவே ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸின் தொனியிலேயே தெளிவாக விளங்கிவிட்டது, அவரது கூற்றுப்படி, புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு பிரச்சினைகள் உள்ளன.
அதாவது, புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள், பெருமளவில் நாடுகடத்தப்படுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசினார் ஓலாஃப். 2023இல் 7,861 புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளார்கள். நாடுகடத்தல் மேம்பாட்டுச் சட்டம் என பொருள்படுத்தப்பட்டுள்ள சட்டம் ஒன்றின்படி, இந்த எண்ணிக்கை 2024இல் அதிகரிக்க உள்ளது. நாடுகடத்தல் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கத் தேவையில்லை, புகலிட தடுப்புக் காவல் காலகட்டம் 28 நாட்களாக நீட்டிப்பு, வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளவர்களின் வீடுகளையும், சொத்துக்களையும் தொலைபேசிகளையும் சோதனையிட பொலிசாருக்கு அனுமதி என பல மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
கடத்தல் போன்ற குற்றச்செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் மட்டுமின்றி, குற்ற அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேக வளையத்தில் உள்ளவர்கள் கூட, இனி விரைவாக நாடுகடத்தப்படக்கூடும் என்று கூறியுள்ளார் உள்துறை அமைச்சரான Nancy Faeser. பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள்
புகலிடக்கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்பும் வகையில் பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திவருகிறது ஜேர்மனி. புகலிட நடவடிக்கைகளை வேகப்படுத்த திட்டம்
புகலிடக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுதல் விரைவாக்கப்பட உள்ளது. ஆனால், அதன் நோக்கமோ, ஜேர்மனிக்கு புலம்பெயர்வோருக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி, புலம்பெயர்தலைக் குறைப்பதாகும் என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார் பவேரிய பிரீமியரான Markus Söder. இனி பணம் எடுக்க முடியாது இனி அகதிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, பணமாக இல்லாமல் ஒரு போன் அட்டை வடிவில் வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி பயணம் செய்யலாம், அடிப்படைத் தேவைகளுக்கான சில பொருட்கள் வாங்கலாம். ஆனால், பணம் எடுக்கவே முடியாது. அத்துடன், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான நிதி உதவி குறைக்கப்பட உள்ளதுடன், அது தொடர்பில் கடும் கட்டுப்பாடுகளும் அமுல்படுத்தப்பட உள்ளன.
திறன்மிகுப்பணியாளர்களுக்கு வரவேற்பு அதே நேரத்தில், திறன்மிகுப்பணியாளர்களை வரவேற்கும் வகையில் பல நல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. மொழிப்புலமை, பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியுடையோருக்கு ஒரு வருட விசா வழங்கப்படும். அவர்கள் ஜேர்மனிக்கு வந்து அந்த காலகட்டத்தில் வேலை தேடிக்கொள்ளலாம். மேலும், திறன்மிகுப்பணியாளர்கள் ஜேர்மனி வருவதற்கான வருமான வரம்பு குறைப்பு, அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை ஜேர்மனிக்கு அழைத்துவரும் நடைமுறை எளிதாக்கப்படுதல் என பல நல்ல நடவடிக்கைகள் விரைவில் துவங்க உள்ளன.